வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பைரவரை வழிபட ஏற்ற காலங்கள் எவை தெரியுமா...?

பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி  நாட்கள் அதிக விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன.

அபிஷேகம்: பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.
 
பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம்  யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.
 
தீபம்: பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக்கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய்  மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப்பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி  வழிபடலாம்.
 
பிடித்த மாலைகள்: பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலைஅணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
 
பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.