1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2015 (16:42 IST)

மேஷம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

முற்போக்குவாதிகளே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதிலே உதயமாகும்.

பழைய பிரச்சனைகள், வழக்குகள், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பூர்வீக சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் தள்ளிப் போய் கொண்டிருந்ததே! இந்தாண்டு சிறப்பாக முடியும். தன்னிச்சையாக சில முடிவுகளெல்லாம் எடுக்கத் தொடங்குவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், அறியாமல் செய்த தவறுகளெல்லாம் மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். நட்பு வட்டத்தால் பலனடைவீர்கள். குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்த உறவினர்களின் மனசு மாறும்.
 
வருடப் பிறப்பு முதல் 07.01.2016 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் கூடும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொஞ்சம், கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கேது 12-ல் நிற்பதால் நீண்ட காலமாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது வரும் கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
 
08.01.2016 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பீர்கள். உங்களுடைய பழங்கதைகளையெல்லாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜென்ரேஷன் கேப் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகளுக்கு திருமணம் தள்ளிப் போகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது.
 
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். என்றாலும் கேது லாப ஸ்தானத்தில் அமர்வதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும்.
 
பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சொந்த ஊர் பொதுக் காரியங்கள், கோவில் திருவிழாக்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசிப் பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்வதால் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வரக்கூடும். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, நெஞ்சு வலி, எலும்புத் தோய்வு வரக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். பயணங்கள் அதிகமாகும். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் நிதானம் அவசியம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். மனைவிக்கு கர்பப்பையில் நீர் கட்டி, ஹார்மோன் பிரச்னைகள் வந்துப் போகும்.
 
கூடாப் பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்தி விட்டு செல்வது நல்லது. வேலையாட்களை வேலைக்கு வைக்கும் போது வீட்டு வேலைக்காக இருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு வைப்பதாக இருந்தாலும் அவர்களை நன்றாக விசாரித்துவிட்டு பணியில் சேர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
உங்கள் மீது சிலர் வீண் வழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. வீட்டில் களவு போகக் கூடும். தங்களுடைய ஆதாயத்திற்காக சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
 
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிலர் புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போன வழக்கு சாதகமாகும். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
 
27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் குடும்பத்தில் சச்சரவுகள் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு ஏற்படும். எனவே இரும்புச் சத்து அதிகமுள்ள காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உங்களை தவறானப் பாதைக்கு தூண்டுவார்கள். நிலம், வீடு, மனை வாங்குவதாக இருந்தால் தாய்பத்திரம், பட்டா, வில்லங்கம் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள்.
 
இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் உங்கள் மனம் எதையே தேடிக் கொண்டிருக்கும். பழைய கசப்புகளை இப்போது நினைத்து டென்ஷனாகாதீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளெல்லாம் எடுக்காதீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.
 
உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வாழ்க்கையில் நமக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.
 
யாராக இருந்தாலும் நெருங்கிப் பழகுவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். அதேப் போல எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.
 
வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். ஏப்ரல், ஜீலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தையும் அறிந்துக் கொள்வீர்கள். என்றாலும் இந்தாண்டு முழுக்க அஷ்டமத்துச் சனி உங்களுக்கு தொடர்வதால் யாருக்கும் கடன் தர வேண்டாம். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்றெல்லாம் மற்றவர்கள் பேச்சை கேட்டு பெரியளவில் முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். இருப்பதை வைத்து லாபம் ஈட்டப்பாருங்கள்.
 
வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். ஏஜென்சி, மார்கெட்டிங், கமிஷன், ரியல் எஸ்டேட், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் தங்களது பங்கை பிரித்துத் தர கோரி தொந்தரவு தருவார்கள். சிலர் வழக்குத் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.
 
உத்யோகத்தில் எதற்கெடுத்தாலும் உங்களை மட்டம் தட்டிக் கொண்டிருந்த அதிகாரி மாறுவார். ஆகஸ்ட் மாதம் முதல் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள்.
 
சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தை வேறு நிறுவனம் வாங்க வாய்ப்பிருக்கிறது. அதனால் உத்யோகத்தில் இடையூறுகள் வரும். சின்ன சின்ன அவமானங்களால் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்துப் போகும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும்.
 
கன்னிப் பெண்களே! வருடத்தின் முற்பகுதியில் புது வேலை அமையும். திருமணமும் கூடி வரும் என்றாலும் வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. 8-ல் சனி தொடர்வதால் ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம்.
 
மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் படிப்பில் ஆர்வமில்லாமல் போகும். தேர்வின் போது படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்பதில் தயக்கம் காட்டாதீர்கள். வேதியியல், கணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.
 
கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மூத்த கலைஞர்களை மதிக்கத் தவறாதீர்கள். சின்ன சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள்.
 
அரசியல்வாதிகளே! உங்கள் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவார்கள். கோஷ்டி பூசலாலும், எதிர்கட்சியினராலும் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
 
விவசாயிகளே! அகலக் கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.
 
இந்த 2016ம் ஆண்டு உங்கள் உடலையும், உள்ளத்தையும் உரப்படுத்துவதுடன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும், ஓரளவு நிம்மதியையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:
 
திருவாரூக்கு அருகிலுள்ள திருக்கீழ்வேளூர் எனும் கீவலூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீஅட்சயலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று தரிசியுங்கள். விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்.