செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 2 ஜனவரி 2015 (13:04 IST)

மேஷம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர்களே! உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் எல்லாவகையிலும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை தந்து புது வண்டி வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமாக புதன் நிற்பதால் நட்பு வட்டம் விரிவடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்கான வழி, வகைப் பிறக்கும். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ராகு நிற்பதால் சில ராஜ தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். 
 
ஷேர் மூலமாகவும் பணம் வரும். எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகள் சாதகமாகும். வேற்றுமொழி, வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். 12-வது வீட்டில் கேது நிற்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தைரியம் கூடும். குழப்பங்கள் நீங்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறை மூலமாக பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
 
 உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள். தன் கையே தனக்குதவி என்பதையும் அறிவீர்கள். உதவி செய்து உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வதை நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். சகோதரங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு, மனை விற்பது, வாங்குவதில் இருந்து வந்த தேக்க நிலை, மந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்கும். அதேப் போல உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். 
 
உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் ஜீன் மாதம் வரை 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருக்கும். செலவினங்களும் அதிகமாகும். சிறுசிறு வாகன விபத்துகளும் வரக்கூடும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்துப் போகும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். அவர்களின் படிப்பு, ஆரோக்யத்தில் அதிருப்தியான சூழ்நிலை உருவாகும். ஆனால் ஜீலை மாதம் முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் வந்தமர்வதால் அதுமுதல் மனநிம்மதி உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். குழப்பிக் கொண்டிருந்த நீங்கள், இனி தெளிவடைவீர்கள். 
 
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கையை விட்டுப் போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும். அரசு காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.  
 
உங்களுக்கு வருடம் பிறக்கும் போது அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சின்ன சின்ன காரியங்கள் கூட தடைப்பட்டு முடிவடையும். புதியவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். பணப்பற்றாக்குறையும் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். தூக்கம் குறையும். சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல் போகும். தவறு செய்யாமலேயே உங்களை சிலர் குற்றவாளியாக்க முயற்சி செய்வார்கள். கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. 
 
வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கியும் பேச வேண்டாம், தூக்கியும் பேச வேண்டாம். பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்காதீர்கள். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னாடி இகழ்ந்து பேசுவார்கள்.   
 
வியாபாரத்தில் சில நேரங்கள் வியாபாரத்தில் ஆர்வமில்லாமலும் போகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓரளவு லாபம் கிடைக்கும். ஜீலை முதல் டிசம்பர் வரை உள்ள காலக்கட்டமும் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். உணவு, மருந்து, கெமிக்கல், கட்டுமானப் பொருட்களாலும் லாபமடைவீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்களால் சிக்கல்கள் வரும். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பொறுப்பற்று நடந்துக் கொள்வார்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். ஜீலை மாதத்திலிருந்து தொழிலில் நிம்மதியும், லாபமும் கிட்டும். 
 
உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் மோதல்கள் வரும். சக ஊழியர்களுடனும் சின்ன சின்ன சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். ஜீன் மாதம் வரை உத்யோகத்தில் பிரச்னைகளும், நிம்மதியற்றப் போக்கும், மரியாதைக் குறைவான சம்பவங்களும் இருக்கும். ஜீலை மாதத்திலிருந்து உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உதாசீனப்படுத்தப்பட்ட உங்களுக்கு மரியாதைக் கூடும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நல்ல திருப்பு முனை உண்டாகும். 
 
மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். விளையாடும் போது சின்ன சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்க்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! வருடத்தின் முற்பகுதியில் காதலில் ஏமாற்றமும், உயர்கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும். ஜீலை மாதத்திலிருந்து கல்வியில் ஆர்வம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். வருடத்தின் இறுதிப் பகுதியில் திருமணம் கூடி வரும். இந்தப் புத்தாண்டு முற்பகுதி பாகற்காயாக இருந்தாலும் பிற்பகுதி பணங்கற்கண்டாக இனிக்கும்.