வியாழன், 28 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. எழுச்சிக் கட்டுரைகள்
Written By Webdunia

தெய்வக் குழந்தைகள்

- மு. பெருமாள்.

ுழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்' என்கிறார் வள்ளுவர்.

குழந்தைகளின் மழலை மொழியின் இனிமையை உணராதவர்கள் யாழிசை, குழலிசை போன்றவற்றை இனிது என்கின்றனராம். குழந்தைகளையும், மழலை பேச்சையும் விரும்பாதவர்கள் இல்லை. கல் நெஞ்சையும் கரைய வைக்கும் மென்மை மழலைகளுக்கு மட்டுமே உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள்:. அதனால்தான் அவர்களை தெய்வத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், சமீபகாலமாக நம்மிடையே தெய்வத்துக்கும் மேலான குழந்தைகள் அதிகரித்து வருகின்றன. ஆம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தான் அந்த தெய்வக் குழந்தைகள்!

நவீன மருத்துவம், நாளொரு ஆரா‌ய்ச்சியும் பொழுதொரு கண்டுபிடிப்புகளுமாய் அதிவேகமாய் வளர்ந்து வருவதை மறுப்பதற்கில்லை. எனினும் சில கொடிய நோய்களுக்கு அல்லது குறைபாடுகளுக்கு நவீன மருத்துவத்தால்கூட தீர்வுகாண முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.

webdunia photoWD
அதில் குறிப்பிடத்தக்க ஒரு குறைபாடு அல்லது நோய், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள். இதுபோன்ற குழந்தைகளுக்கு போதிய சிந்தனை சக்தி, ஞாபகசக்தி இருப்பதில்லை. மூளையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப உடலில் குறைபாடுகள் இருக்கும். மாறு கண், முட்டைக்கண், காது கேளாமை, கை, கால் செயல் இழப்பு, எச்சில் ஒழுகுதல் என அவலட்சணமாக தோற்றமளிக்கும்.

மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர். நெருங்கிய உறவில் திருமணம் (இதுபற்றி இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும், மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி இது), கர்ப்பிணிகள் தவறான மருந்துகளை சாப்பிடுவது, கீழே விழுந்து அடிபடுதல் போன்றவை முக்கியக் காரணங்களாகின்றன. மருத்துவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாமை, கவனக்குறைவு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன.

பிறந்தவுடனேயே குழந்தைகள் அழவேண்டும். அப்போதுதான் மூளைக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து,

அதில் உள்ள செல்கள் செயல்பட துவங்கும். பிறந்தவுடன் அழாத குழந்தைகளின் மூளை செல்கள், ரத்தம் ஓட்டம் இன்றி இறந்துவிடுகின்றன. இதனால் அந்த குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.

இதுபோன்ற குழந்தைகளை சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பிற மருத்துவ முறைகளின் மூலமாகவும் குணப்படுத்தமுடியும். இது தவிர, மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படியும் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இதனால் சமீபகாலமாக, நர்சரி பள்ளிகள் போன்று, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளும் அதிகளவில் தோன்றி வருகின்றன. மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் மன வளர்ச்சியைத் தூண்டக் கூடிய தனித்த பாடத் திட்டங்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப, பிசியோதெரபி, பேச்சுப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனைகளிலும் தற்போது சிறப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன.

மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளை பொருத்தவரை, அவர்கள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்திச் செய்துக்கொள்ளும் நோக்கில்தான் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முறையான மருத்துவச் சிகிச்சை, பராமரிப்பு, பயிற்சி போன்றவற்றை அளிப்பதன் மூலம், அவர்களாலும் சாதாரண குழந்தைகளுக்கு இணையாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்த முடியும்.

எனவே, மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள், சமூகத்தின் பார்வைக்கு பயந்து தங்களது சிறப்புக் குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி வைக்காமல், சைதாப்பேட்டை, தி.நகர், மந்தவெளி (ஆந்திரா மகிளா சபா மருத்துவமனை), போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, கோட்டூர்புரம், தரமணி, மே.மாம்பலம், கே.கே.நகர் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வரும் சிறப்புப் பள்ளிகளில் சேர்த்து முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளும் வாழப் பிறந்தவர்களே என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிப்போம்.

எதிர் காலத்தில் ஓர் ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாக
வழிவகை செய்வோம்!.