வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (15:40 IST)

மாநில முதல்வர்கள் செயல்பாடுகள் எப்படி ? – எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடைசி இடம் !

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடைசி இடம் கிடைத்துள்ளது.

'சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ்' செய்தி நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களின் செயல்பாடு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவிலேயே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் செயல்பாடு சிறப்பாகவும், மனநிறைவு அளிப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்து உள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 68 சதவீதம் பேர் சந்திரசேகர் ராவ் நிர்வாகம், செயல்பாடு மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

அவரை அடுத்த இடத்தில் இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 2-வது இடத்திலும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் , கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் 4, 5 மற்றும் 6 ஆவது இடத்தில் உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோரின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மிகக்குறைந்த அளவு மனநிறைவு அளிக்கும் வகையில் செயல்பட்ட முதல்வர் வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடைசி  இடத்தை வாக்காளர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி சிறப்பாக அமையாது என அவர்கள் கூறியுள்ளனர்.