வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (12:03 IST)

கைக்கடிகாரம் பற்றிய புகாரை சந்திக்க தயார் - மோடிக்கு சிதம்பரம் பதிலடி

கைக்கடிகாரம் வழங்கியதாக நரேந்திர மோடி கூறிய புகாரை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் கூறினார்.
“நேற்று தேவகோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ப.சிதம்பரம் கூறியதாவது:-
 
இன்று நரேந்திர மோடி என்ற மாயையை காட்டுகிறார்கள். இதில் என்ன அதிசயம்? 60 ஆண்டுகளில் செய்யாததை 60 நாட்களிலேயே செய்து முடிப்பாராம். இது எப்படி முடியும்? கங்கையை சிவகங்கைக்கு கொண்டு வருவார்களாம். இந்தியாவின் பூகோளம் தெரியுமா? இந்தியாவின் மத்திய பகுதியிலே மலைப்பகுதி உள்ளது என்பது தெரியுமா?
 
மேல்நிலைத் தொட்டியிலே தண்ணீரை ஏற்ற வேண்டுமென்றால் கூட பம்ப் வைத்து ஏற்ற வேண்டும். 6 ஆயிரம் அடி மலையை எப்படி கங்கை நதி கடக்கும். எவ்வளவு குதிரைத்திறன் உடைய பம்ப்பை வைத்து 6 ஆயிரம் அடி மலையை கடக்கப் போகிறீர்கள்?
 
மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற வேண்டும் என்றால் கங்கை தானாக மலையை கடந்து வருமா? கங்கையை சிவகங்கைக்கு கொண்டு வருகிறேன் என சொல்வது எல்லாம் வாய் ஜாலம். வெற்றி பெற மாட்டோம் என்ற தைரியத்தில் இப்படி சொல்கிறார்கள்.
 
இது போன்ற அண்டப் புழுகு, ஆகாச புழுகுகளை பார்த்து அழுவதா? சிரிப்பதா என தெரியவில்லை.
 
நரேந்திர மோடி என்கவுன்டர் முதலமைச்சர் என்றும், அவர் மிகப் பெரிய பொய்யர் என்றும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதனை நிரூபிக்கும் வகையில் மோடி தற்போது பேசியுள்ளார். மோடி குஜராத்தில் சொல்லும் பொய்யை தமிழகத்திலும் சொல்லியுள்ளார்.
 
3 ஆண்டுகளுக்கு முன் எனது 65-வது பிறந்தநாளையொட்டி, என் கட்சிக்காரர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கப்பட்டது. அதை இப்போது கொடுத்ததாக மோடி தவறாக கூறுகிறார். வாக்காளர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கினேன் என்று என் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
 
இவ்வாறு அவர் பேசினார்.