வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (11:46 IST)

காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் குத்திக்கொலை: நடந்தது என்ன?

வேளச்சேரியில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
சென்னையை அடுத்த வேளச்சேரி பெருங்குடி பறக்கும் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
 
உடனே காவல்துறையினர் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை பார்த்தபோது இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் வயிறு, கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
 
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருகிலேயே வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததால் அவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்த பெண் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகள் வைசியா (வயது 25) என்பது தெரியவந்தது. இவர் வேளச்சேரியில் உள்ள டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
 
காயங்களுடன் கிடந்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருப்பூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் வெங்கடாஜலபதி (29) என தெரியவந்தது. வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் வைசியா தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். வெங்கடாஜலபதியும், அதே பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கியுள்ளார்.

ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதால் வைசியா அழகில் மயங்கிய வெங்கடாஜலபதி அவரை காதலிக்க தொடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை காதலிக்குமாறு வைசியாவிடம் வெங்கடாஜலபதி கேட்டார். அதற்கு வைசியா சிறு வயதில் இருந்து நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் தற்போது கேரளாவில் பணியாற்றுகிறார். உன்னை காதலிக்க முடியாது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதால் நண்பர்களாக இருப்போம் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் ஒரு தலையாக காதலித்ததால் வெங்கடாஜலபதி விடாமல் அவரை தொல்லைபடுத்தி வந்தார்.
 
இந்த நிலையில் தனியாக பேச வேண்டும் என கூறி நேற்று முன்தினம் இரவு பெருங்குடி ரயில் நிலையம் அருகே வைசியாவை வெங்கடாஜலபதி அழைத்து சென்றார். அங்கு சென்ற வைசியாவிடம் மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என வெங்கடாஜலபதி கேட்டார்.
 
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடாஜலபதி, மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வைசியாவின் கழுத்து. வயிறு, நெஞ்சு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் வைசியா மயங்கி விழுந்ததை கண்ட வெங்கடாஜலபதி அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
பெண் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ஜினீயர் வைசியா கொலை செய்யப்பட்ட தகவல் மன்னார்குடியில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்டதும் அவர்கள் நேற்று இரவே புறப்பட்டு சென்னைக்கு வந்தனர். வைசியாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
 
இதற்கிடையே தற்கொலைக்கு முயன்ற வெங்கடாஜலபதிக்கு மருத்துவமனையில் நேற்று மதியம் அறுவை சிகிச்சை நடந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் கூறினர்.
 
அவரிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறையினர் முயன்றனர். ஆனால் அவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. இதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.