வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (20:01 IST)

கள்ளக்காதலுக்கு மறுத்ததால் பெண் நடுரோட்டில் குத்திக் கொலை

தேனி மாவட்டம் குமுளியில் பெண் ஒருவர் கள்ளக்காதலை தொடர மறுப்பு தெரிவித்ததால் நடுரோட்டில் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
தேனி அருகே உள்ள கூடலூர் மேதைக்கார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி தேக்கடி, வண்டன் மேடு பகுதிக்கு கட்டிட வேலைக்கு செல்வது உண்டு.
 
அப்போது இவருக்கும் லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி அன்னலட்சுமி (வயது 25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர் மணிகண்டனிடம் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் தனிமையில் சந்தித்தனர்.
 
இந்த விவகாரம் அன்னலட்சுமியின் கணவன் கண்ணனுக்கு தெரிய வந்தது. இவர் தனது மனைவியை கண்டித்தார். அதன்பின்னர் அன்னலட்சுமி மணிகண்டனுடன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். அவருடன் பேசவும் இல்லை.
 
காதலியை காணாத மணிகண்டன் அனலில் விழுந்த புழு போல துடித்தார். எப்போது அன்னலட்சுமியை பார்ப்போம் என்று தவியாய் தவித்தார். இன்று காலை அன்னலட்சுமி லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி வந்து இறங்கினார். இதனை அறிந்த மணிகண்டன் அங்கு சென்றார்.
 
காதலியை பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். உடனே அவரை நோக்கி சென்றார். ஆனால் மணிகண்டனை பார்த்த அன்னலட்சுமி வேகமாக நடையை கட்டினார். உடனே மணிகண்டன் அவரை வழிமறித்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்று ஏக்கத்துடன் கேட்டார். அதற்கு அன்னலட்சுமி நீ இனி என்னை பார்க்காதே. விசயம் எனது கணவருக்கு தெரிந்து விட்டது. இனி நான் எனது குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ போகிறேன் என்று தெரிவித்தார். இந்த பேச்சு மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனினும் மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
 
இதனால் கோபம் கொண்ட மணிகண்டன் கத்தியால் அன்னலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மணிகண்டனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து குமுளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அன்னலட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
 
குமுளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.