வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2015 (10:30 IST)

வாலிபரை ஓட, ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல்

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபரை ஒரு மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் விரட்டிச் சென்று பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
 
புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிகுப்பம் நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மணிகண்டன். 21 வயதான இவர் கட்டிடம் கட்டும் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில், வழக்கம்போல் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் உணவுக்காக வீட்டுக்கு வந்தார். வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வேலைக்குப் புறப்பட்டு சென்றார்.
 
அப்போது, வீட்டின் அருகே மர்ம கும்பலலைச் சேர்ந்தவர்கள், மோட்டார் சைக்கிளில் மணிகண்டனை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர்.
 
இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். அப்போது ஏறபட்ட பதற்றத்தார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே சுதாரித்து எழுந்த அவர், தன்னை துரத்திவரும் கும்பலிடம் இருந்து தப்பிப்பிக்க அங்கிருந்து ஓடினார்.
 
பின்னர், ஒரு வீட்டுக்குள் புகுந்த அவர், அதன் கதவுகளைப் பூட்டிக்கொண்டார். அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மணிகண்டனை சரமாரியாக வெட்டினர்.
 
இதனால், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்த கும்பல் மணிகண்டனின் உடலை வெளியே இழுத்து வந்து வீட்டின் வாசலில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
 
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணிகண்டனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், கொலை செய்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.