1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2017 (12:11 IST)

2வது திருமணம் செய்த 4 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் - காரணம் என்ன?

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நான்கே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

புதுச்சேரியை அடுத்த பாகூர் திருமால் நகரை சேர்ந்தவர் முருகராஜ் (35). இவரது மனைவி ஏற்கனவே இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடலூர் சாவடியை சேர்ந்த கலா (27) என்ற இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கலாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் இறந்து விட்டார். கலாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் முருகராஜ் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கலா வீட்டு வராண்டாவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ’முருகராஜை திருமணம் செய்த நாளில் இருந்து, முதல் மனைவி குழந்தைகளை கலா பாசத்துடன் கவனித்து வந்ததாகவும், ஆனால், குழந்தைகள் குருவி நத்தத்தில் வசிக்கும் தங்கள் தாயை அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை விரும்பாத கலா இது குறித்து கணவர் முருகராஜிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதேபோல் நேற்றும் அந்த குழந்தைகள் குருவி நத்தம் சென்று தாயை சந்தித்து பேசி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கலா தூக்கிட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.