1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2015 (12:16 IST)

கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி நாக்கை அறுத்து காணிகை செலுத்திய தொழிலாளி

ஜோலார்பேட்டை அருகே, கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி, கட்டிட தொழிலாளி ஒருவர் தனது நாக்கை அறுத்து கோவில் முன்பு வைத்து வேண்டியுள்ளார்.
 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர். இவருக்கு வயது 27. கட்டிட தொழிலாளியான சுதாகர் தீவிர கிரிக்கெட் ரசிகர்.
 
சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், கமலேசன் என்ற இரண்டரை வயது மகனும் உள்ளனர். இவரது மாமியார் வீடு ஜோலார்பேட்டையை அடுத்த பெரியமோட்டூரில் உள்ளது.
 
இந்நிலையில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா–இந்தியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை சுதாகர் தனது மாமியார் வீட்டிலிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது ஜோலார்பேட்டையை அடுத்துள்ள பொன்னேரி பகுதியில் உள்ள வேடியப்பன் கோவிலுக்குச் சென்று இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண்டுதல் செய்துவிட்டு, வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
 
கோவிலுக்குச் சென்ற சுதாகர் அங்கு கற்பூரம் ஏற்றி சாமிகும்பிட்டுள்ளார். பின்னர் பிளேடால் தன்னுடைய நாக்கை அறுத்து துண்டாக்கியுள்ளார். அறுத்து துண்டாக்கப்பட்ட தனது நாக்கை கோவில் முன்பு வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கடவுளிடம் வேண்டியுள்ளார்.
 
அப்போது இதைக்கண்டு  அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஓடி வந்து, சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெறவேண்டி வலிக்க வலிக்க தனது நாக்கை தனது கைகளாலேயே அறுத்த இந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 95 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.