1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (15:34 IST)

சிறுமியை திருமணம் செய்துவைக்க ஜால்ரா தட்டிய பெண் காவல் அதிகாரி

17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றவருக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் உடந்தையாகச் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் மூன்றாவது மகள் தேவிகா லட்சுமி [வயது 17]. இவரை டி.எடப்பாளையும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் குடும்பத்தினர் பெண் கேட்டு வந்துள்ளனர்.

ஆனால், தற்போது எனது மகளுக்கு திருமணம் செய்யவில்லை. அவருக்கு 17 வயதுதான் ஆகிறது என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.

சிறிது நாட்கள் கழித்து சங்கர் குடும்பத்தினர் திருமண பத்திரிகை அச்சடித்து கொண்டுவந்து செல்வி இல்லத்தில் கொடுத்துள்ளனர். அதில், மணமகளின் பெயர் உள்ள இடத்தில் தேவிகா லெட்சுமியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. மேலும், வரும் 27ஆம் தேதி திருமணம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனைக் கண்டதும் செல்வி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து புகாரளிக்க விழுப்புரம் மகளிர் காவல்நிலையம் சென்றனர். ஆனால், காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் மணமகன் வீட்டாருக்கே சாதகமாக பேசி உள்ளார்.

இது குறித்து செல்வியின் சகோதரி லாவண்யா எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் காவல் அதிகாரி லாவண்யாவிடம் இருந்த செல்போனை பிடுங்கி அவரது தலையில் வீசி அடித்துள்ளார்.

இதனால் லாவண்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லாவண்யா மற்றும் செல்வி குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.