வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 25 ஜூன் 2014 (17:39 IST)

சிங்கள இயக்குனர் படம்: கவிஞர் ஜெயபாலனுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இடையே மோதல்

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்றபடுத்தியுள்ள பிரசன்னா விதானகேவின் சிங்கள திரைப்படம் 'With you without you' நேற்று தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பிரத்தியேகக்காட்சி மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது.
 
இந்த திரைப்படத்தில் பயங்கரவாதிகள் என்று சொல்லபட்டதற்கு கடும் எதிர்ப்பினை தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால், அங்கு  சில நபர்களுடனும், குடும்பத்தினருடனும் வந்திருந்த கவிஞர் ஜெயபாலன் சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவையும், அவருடைய படத்தையும் பாராட்டியும் ஆதரித்தும் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் கவிஞர் ஜெயபாலனைத் தாக்க முயன்றனர். ஆனால் ஜெயபாலனுடன் வந்த நபர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.
 
தொடர்ந்து சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவிடம் திரைப்படம் குறித்த பல்வேறு கேள்விகளை இயக்குனர் கவுதமன், மே 17 இயக்க தோழர்கள், மாற்றம் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பிரதீப் குமார், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் கேட்டனர்.
 
குறிப்பாக இயக்குனர் கவுதமன், அங்கு நடந்தது இனபடுகொலை என்பதை நீங்கள் ஒரு படைப்பாளியாகவோ அல்லது சிங்களவராகவோ அல்லாமல் ஒரு மனிதநேயமிக்கவர் என்ற நிலையில் உங்கள் பதிலை சொல்லுங்கள் என்றார். ஆனால் அதற்கு முழுமையான பதிலை அவர் அளிக்கவில்லை.
 
மேலும், தமிழ் உணர்வாளர்கள் சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகேவிடம் கேள்விகள் தொடுத்தனர். சில கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது திக்குமுக்காடியபோது அந்த சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக திரைப்பட கலைஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் உணர்வாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
இதனைத் தொடர்ந்து ஜெயபாலனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தொடந்து சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது தமிழ் உணர்வாளர்கள் அரங்கம் நிறைய இருந்ததால் ஜெயபாலனால் சமாளிக்க முடியவில்லை. அதேவேளை ஜெயபாலனுக்கு ஆதரவாக அவரது மனைவி தமிழ் உணர்வாளர்களை தகாத வார்த்தையில் திட்டினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் அவருடனும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
 
ஜெயபாலனுடன் லீனா மணிமேகலை மற்றும் சில நபர்களும் வந்திருந்தனர். இறுதியில் தமிழ் உணர்வாளர்கள் மீது காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார் ஜெயபாலன்.
 
நன்றி:- பதிவு இணையதளம்