வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (16:06 IST)

மனைவியையே காப்பாற்ற முடியாத மோடியால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும்: பொளந்து கட்டும் நக்மா

மனைவியையே காப்பாற்ற முடியாத மோடியால் நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும்? என்று கேள்வி எழுப்பி நக்மா  நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.


 

 
தமிழக மகளிர் காங்கிரஸ் புதிய பொறுப்பாளராக ஜான்சி ராணி நியமிக்கப்பட்ட பிறகு முதல் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் நடிகை நக்மா, செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
 
இந்த கூட்டத்தில் நக்மா பேசியதாவது:–
 
கடந்த 18 வருடங்களாக சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து வருகிறார். காங்கிரசைப்போல் எந்த கட்சியும் நாட்டுக்கு நல்லது செய்தது கிடையாது.
 
ராகுல் காந்தி பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார். பாஜக வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும். கட்சி பல இடங்களில் ஊழல்களிலும் ஈடுபட்டு இருக்கிறது. மக்களை பிரித்தாளும் அரசியலை செய்து வருகிறது.
 
தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவோம். கருப்பு பணத்தை மீட்டு வருவோம். பெட்ரோல் – டீசல் விலையை குறைப்போம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை.
 
தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இன்று அந்த சட்டத்தின் மூலம்தான் மோடி மனைவி யசோதாபென் தனது உரிமைகளுக்காக போராடி வருகிறார். 
 
மனைவியையே காப்பாற்ற முடியாத மோடியால் நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும்?.
 
தமிழகத்தில் மக்களுக்கு இலவசங்களை கொடுக்கிறார்கள். ஆனால் வாழ்வாதாரங்களை செய்து கொடுக்கவில்லை. கல்வி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை.
 
விழுப்புரத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் இறந்து இருக்கிறார்கள். அந்த கல்லூரியில் நடந்த பிரச்சினைகள் பற்றி ஏற்கனவே மாணவிகள் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து உள்ளனர்.
 
அப்போது மனித வள மந்திரி நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழகத்தில் மிகப்பெரிய தலைவர்களான காமராஜர், கக்கன், ஏ.எஸ்.பொன்னம்மாள் போன்றவர்களின் வழிகாட்டுதலோடு காங்கிரசை பலப்படுத்த ஒவ்வொரு வரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.