வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (08:35 IST)

மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் ஆர்பி உதயகுமார்

மக்களவை தேர்தல் முடிந்தாலும் இன்னும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சியின் தலைவர்கள் ஓய்வின்றி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தனது மனைவியுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். 
 
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியபோது, 'மே 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சியை அமைப்போம் என்று கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்காது. தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார் என்று கூறினார்.
 
இதே மேடையில் பேசிய அமைச்சர்  எம்.சி.சம்பத் பேசுகையில்,  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம் என்று கூறியதுடன், ஜெயலலிதாவின்  விஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.