வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (00:40 IST)

அவசர அவசரமாக பேராசையுடன் செயல்படுவது ஏன்? - சசிகலாவை தாக்கும் சசிகலா புஷ்பா

அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா விரைவில், தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
.

 
தொடக்கத்தில் இருந்தே சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருபவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. ஏற்கனவே சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, ”முதலமைச்சராக பதவியேற்க தகுதி இல்லாதவர் சசிகலா நடராஜன். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது.
 
சசிகலா அவசர அவசரமாக பேராசையுடன் செயல்படுவது ஏன்? குற்றவாளியாக தண்டிக்கப்பட்டவர். உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் எப்படி தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக ஆக முடியும்?
 
ஒரு கிரிமினல் பின்னணி இருக்கக்கூடிய ஒருவர் முதலமைச்சர் ஆவதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை. சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை அறிந்த அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்” என்றார்.