செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:35 IST)

”இந்தியாவையே தடை செய்வோம்” - மோடியின் அறிவிப்பால் கொந்தளித்த மாணவர்கள்

மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால், இந்தியாவிற்கே தடை செய்ய போராடுவோம் என்று போராட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் டெல்லி சென்றார்.

ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்துள்ளது. ஜல்லிக்கட்டு கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு போராட்ட களத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், “தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டும் வருகிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிப்பதாக இருந்தால், இந்நேரம் அவசர சட்டத்தை பிறப்பித்து இருந்திருக்கும்.

ஆனால், மோடி அரசு நமது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று தெரிகிறது. இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையாக இருந்த பீட்டா அமைப்பிற்கு எதிராகத்தான் போராடி வருகிறாம். தொடர்ந்து இதுபோன்று மத்திய அரசு நடந்துகொண்டால், இந்தியாவையே தடை செய்ய போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.