1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 18 மே 2016 (12:14 IST)

ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாஷாவை கொலை செய்தோம் : வாலிபர் வாக்குமூலம்

மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் மற்றும் தொழில் பங்குதாரர் சாதிக்பாஷா தற்கொலை செய்து கொள்ளவில்லை. நாங்கள்தான் கொலை செய்தோம் என்று போலீசாரிடம் வாலிபர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
2ஜி வழக்கில் ராசாவுடன் தொடர்புடையவராக கூறப்பட்ட சாதிக்பாட்சா 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனல், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று திருச்சியை சேர்ந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் சமீபத்தில் திருச்சியில் இதுபற்றி பேட்டி கொடுத்தார். உடனடியாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
போலீசாரிடம் அவர் கூறியதாவது:
 
“2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், 16ஆம் தேதி ஆ. ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமாரின் அலுவலகத்திற்கு சாதிக்பாஷா வரவழைக்கப்பட்டார்.
 
அவரிடம் விடிய விடிய பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.ஜி. ஜாபர்சேட் திடீரென சாதிக்பாட்சாவின் கழுத்தை துண்டால் இறுக்கினார். நான் சாதிக்பாஷாவின் கால்களைப் பிடித்துக்கொண்டேன். சிறுது நேரத்தில் அவர் மரணமடைந்தார்.
 
அவர் இறந்தவுடன், உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று, தூக்கில் மாட்டி விட்டு வந்து விட்டோம். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அனைவரும் நினைத்தனர். இதை வெளியே கூறாமல் இருப்பதற்காக எனக்கு ரூ.1 கோடி தருவதாய் கூறினார்கள். ஆனால் இதுவரை அந்த பணத்தை எனக்கு கொடுக்கவில்லை” என்று கூறினார்.
 
அவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து, உளவுத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.