1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:12 IST)

விஸ்வரூபமெடுக்கும் தனுஷ் விவகாரம்: மரபணு சோதனைக்கு தயார் என சவால்!

விஸ்வரூபமெடுக்கும் தனுஷ் விவகாரம்: மரபணு சோதனைக்கு தயார் என சவால்!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் தாங்கள் தயாராக இருப்பதாக மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.


 
 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலூரை சேர்ந்த தம்பதிகள் உரிமை கொண்டாடுகின்றனர். கதிரேசன், மீனாள் தம்பதியினருக்கு 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ளார் தனுஷ். இவருடைய உண்மையான பெயர் கலையரசன்.
 
சிவகங்கை அரசு போக்குவரத்து பனிமனையில் டைம் கீப்பராக பணிபுரிந்து வரும் கதிரேசன் கூறும் போது தங்கள் மகன் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது கடந்த 2002-ஆம் ஆண்டு படிக்க பிடிக்கவில்லை என பிரிந்து சென்றுவிட்டான். தனுஷ் என பெயரை மாற்றி நடிகராக மாறிவிட்டதாகவும், இதுவரை தங்களை வந்து பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். சென்னைக்கு சென்ற அவரை பார்க்க முயன்றால் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என்றும் அவரிடம் இருந்து ஜீவனாம்ச பெற்றுத் தருமாறும் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த அவர்கள், காணாமல் சென்ற மகனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சினிமாவில் நடித்துக்கொண்டிருப்பது தெரியவந்து சென்னைக்கு சென்றால் கஸ்தூரிராஜா எங்களை விரட்டுகிறார். தற்போது நாங்கள் தனுஷ் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. மாதம்தோறும் எங்களுக்கு ஜீவனாம்சம் வழங்கினால் போதும். தேவைப்பட்டால் மரபணு சோதனை செய்யக்கூட நாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.