வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bharathi
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (07:58 IST)

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் காவல்துறையினரால் மறைக்கப்படுவதாக கூறப்பட்ட கடிதத்தின் மேலும் இரண்டு பக்கங்கள் வெளியாகி உள்ளன. 


 
 
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் அதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாகவே விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
விஷ்ணுப்பிரியாவின் தற்கொலைக்கு பிறகு அவர் எழுதியதாக கடிதம் ஒன்றை காவல்துறையினர் வெளியிட்டனர். அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் , இது தன்னால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
ஆனால் காவல்துறை வெளியிட்ட கடிதத்தில் சில பக்கங்கள் மட்டுமே விஷ்ணுப்பிரியாவின் கையெழுத்து என்றும் மற்ற பக்கங்களில் உள்ள கையெழுத்துக்கள் விஷ்ணுப்பிரயாவுடையது அல்ல என்றும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
 
இந்நிலையில் விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதத்தின் மேலும் இரண்டு பக்கங்கள் வெளியாகி உள்ளன.அந்தக் கடிதத்தில் தாம் தற்கொலை செய்யும் வீடியோ தமது கையடக்க கணினியில் இருக்கும் என்றும், அதனை எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
வீடியோவைப் பார்த்தால் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்பதால், தமது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் விஷ்ணுபிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
விஷ்ணுப்பிரியா குறிப்பிட்டுள்ள அந்த கையடக்க கணினி கிடைத்தால் மட்டுமே இந்த தற்கொலை வழக்கில் பிணைக்க்கப்பட்டிருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.