வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (08:28 IST)

வேலுநாச்சியார் போல் வரிவிதிப்பை எதிர்ப்போம்

பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் எதிர்த்ததை போல் திரையுலகினர்களுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை எதிர்த்து போராடி அதில் வெற்றியும் பெறுவோம் என்று விஷால் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் நாட்டிய நாடகம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நாடகத்தை காண மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நாட்டிய நாடகம் குறித்து விஷால் பேசியதாவது:


 
 
வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக அதை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். எனக்கு அரசோடு முக்கியமான சந்திப்பு இருந்தது. சில விஷயத்தை சில நேரத்தில் தவிர்க்க வேண்டியிருக்கும். 
 
முதலில் இந்த நாடகத்தை இயக்கிய இயக்குனருக்கும் , இந்த நாடகத்தில் வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் , பெரிய மருது , சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நடித்த நடிப்பு , தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள். இங்கே நமது திரைத்துறையை சேர்ந்த பலரும் இருப்பார்கள். 
 
பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலுநாச்சியார் போராடினார். தமிழ்அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும். ஒரு பாதுகாப்பான பாதை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலுநாச்சியார் என்ற கதாபாத்திரத்துக்கும் , என்னை ஊக்குவித்த வேலுநாச்சியார் கதாபாத்திரத்துக்கும் நன்றி. அதே போல் நான் கத்தியால் சண்டை போட போவதில்லை , புத்தியால் தான் சண்டை போட போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 
 
எனக்கு வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு வாய்பளித்த அனைவருக்கும் நன்றி.