வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (13:58 IST)

போலீஸ்காரர்களே தீ வைத்துவிட்டு சமூக விரோதிகள் என்பதா?

காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துவதற்காக, அவர்களே தீயிட்டு எரித்துள்ளனர். போலீசார் நடத்திய சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


 

கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால், தடியடி நடத்தப்பட்டது. இதையொட்டி பெரும் கலவரம் உருவானது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது காவல் துறையினரே செய்ததாக வீடியோ வெளியானது.

இதுதொடர்பாக கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், ’இதுபோன்ற காட்சிகள் மார்ஃபிங் செய்து இருக்கலாம். அப்படி இருந்தாலும் இதுவரை அதுபோன்ற வீடியோவை நான் பார்க்கவில்லை’ என கூறினார். இதற்கு மக்கள் நல கூட்டணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் பேசுகையில், ”நேற்று தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய தடியடி காட்சிகளை பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்தோம். இதில் வாகனங்கள் ஏராளமாக எரிக்கப்பட்டன. அவற்றை சமூக விரோதிகள் செய்ததாக, மாநகர ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்

ஆனால், நாங்கள் பார்த்த வீடியோ காட்சியில், காவல் துறையினரே வாகனங்களுக்கு தீ வைத்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். ஆனால், இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என கமிஷனர் கூறுவது விந்தையாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடந்த அசம்பாவித சம்பவத்துக்கு நியாயம் வேண்டும். காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துவதற்காக, அவர்களே தீயிட்டு எரித்துள்ளனர். போலீசார் நடத்திய சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.

எனவே கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பொதுமக்களுக்கு நியாயம் கேட்டு, நாங்கள் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.