1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (10:08 IST)

ஆண் குழந்தைக்குதான் சொத்து – பேத்தியை கொல்ல தூண்டிய தாத்தா!

விழுப்புரம் மாவட்டம் அருகே பெண் சிசு கொல்லப்பட்ட விவகாரத்தில் கொலைக்கு தூண்டிய தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் பகுதியில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ஆற்று மணலில் புதைத்து கொன்றார் குழந்தையின் தந்தை வரதராஜன். இந்த வழக்கில் வரதராஜன் கைது செய்து விசாரிக்கப்பட்டார்.

வரதராஜனின் அப்பா துரைக்கண்ணுக்கு 4 ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. வரதராஜன் தன் அப்பாவிடம் நிலத்தை தனக்கு தரும்படி தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார். தனக்கு பேரன் பிறந்தால் அந்த நிலத்தை தருவதாக துரைக்கண்ணு கூறியிருக்கிறார். இந்தநிலையில் வரதராஜன் மனைவி சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்து விட்டதால் தனது அப்பா சொத்து தரமாட்டார் என அஞ்சிய வரதராஜன் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்று ஆற்றில் புதைத்துள்ளார்.

விசாரணையின் மூலம் தெரிய வந்த இந்த தகவலையடுத்து வரதராஜனின் தந்தை துரைக்கண்ணு கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.