வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (12:39 IST)

ஆட்சி கவிழாது ; சிம்பிள் மெஜாரிட்டி மூலம் 6 மாத ஆட்சி - எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த நம்பிக்கை

ஆட்சியை தக்க வைக்க டெல்லி மேலிடம் கொடுத்த சில நம்பிக்கை காரணமாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த பயமும் இல்லாமல், உற்சாகத்துடன் உலா வந்து கொண்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
எடப்பாடி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். அதன் பின் அதிலிருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ மட்டும் விலகி எடப்பாடி அணிக்கே மீண்டும் சென்றுவிட்டார். தற்போது கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆதரவை சேர்த்து மொத்தம் 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது.
 
முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை அகற்றும் முடிவில் தீவிரமாக உள்ள தினகரன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஒருபுறமும் திமுகவும் ஆளுநர் சந்திப்பு, ஜனாதிபதியிடம் முறையீடு எனத் தொடங்கி தற்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. எனவே, வருகிற 20ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி நீதிமன்றம் ஆணையிடும் எனத் தெரிகிறது. 


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நிச்சயம் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் ஒத்துழைக்க வேண்டும். மேலும், அதிலும் ஏதோ சட்ட சிக்கல் இருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில்தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அவர் ஏதேனும் அறிவிப்பை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போதுள்ள நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி அரசிடம் இல்லை.  ஆனால், ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டு சில முடிவுகள் மூலம் எடப்பாடி தலைமையிலான அரசை தொடர வைக்க முடியும். அதாவது, தேர்தல் முடிந்து இன்னும் 2 வருடங்கள் கூட ஆகாத நிலையில் மற்றொரு தேர்தல் அவசியம் இல்லை எனக்கூறி, சிம்பிள் மெஜாரிட்டி என்ற விதிப்படி, இன்னும் ஆறு மாதல் காலம் தற்போது உள்ள ஆட்சியே தொடர ஆளுநர் அனுமதிக்க முடியும். 
 
அந்த 6 மாத கால அவகாசத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் எடப்பாடி அரசு வளைத்துக்கொள்ள முடியும் என்பதுதான் டெல்லி மேலிடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்துள்ள நம்பிக்கை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, எப்படியும் ஆட்சி கவிழாது என்கிற நம்பிக்கையில் உற்சாகமாக உலா வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
 
திமுக மற்றும் தினகரன் தரப்பு சட்ட நடவடிக்கைகளை மீறி எடப்பாடி அரசு எப்படி நீடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.