1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (13:59 IST)

ஜெ.வின் ஆள் அல்ல சசிகலா : 20 வருடத்திற்கு முன்பே கூறிய வலம்புரி ஜான்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், அவரது கணவர் நடராஜனும் கூட்டாக சேர்ந்து கோடி கோடியாக கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர் என வார்த்தை சித்தர், மறைந்த வலம்புரி ஜான் 20 வருடத்திற்கு முன்னே ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவுக்கு பின், அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஒன்று கூடி, ஜெ.வின் நீண்ட தோழியான சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். விரைவில் அவர் அந்த பதவியை ஏற்றுக் கொள்வார் எனத்தெரிகிறது. தமிழக முதல்வராகவும அவர் நியமிக்கப்படலாம் என ஒரு புறமும் செய்திகள் பரவி வருகிறது.
 
ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த போது, அவரது மேடை பேச்சு மற்றும் அறிக்கைகளை வடிவமைத்து கொடுப்பதற்காக எம்.ஜி.ஆரால் அனுப்பட்டவர் வலம்புரி ஜான். அதன் பின், அவர் ஜெ.விற்கு எதிராக செயல்படுகிறார் என சசிகலா மூலம் குற்றம் சுமத்தப்பட்டு, ஜெ. உடனான உறவை துண்டித்துக் கொண்டவர் ஆவார்.
 
இந்நிலையில், ஜெயலலிதா முதல் முதலாக 1991ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற போது, நக்கீரன் வார இதழில் வலம்புரி ஜான் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
 
சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்.
 
ஜெ.வின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.வோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர். தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சவுந்தர்ராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல், ஜெ.,யை பார்க்க கூடாது என்ற நிலைக்கு மாற்றினர். எல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர்.
 
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை, சசிகலாவால் பழிவாங்கினார்; சசிகலாவோ, ஜெ.வின் விசுவாசிகளையே பழிவாங்கினார். நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெ. வின் பார்வையில் படாமல் துரத்தினர்.
 
ஜெ.வை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, '36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார்' என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.
 
இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம்.
 
தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர். இந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார்”  என தெளிவாக அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளர் வலம்புரி ஜான்.
 
அவர் கூறியது அனைத்தும் அப்பட்டமான உண்மை எனவும், தற்போது அது அப்படியே நடந்து வருகிறது எனவும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவிப்பதோடு, இந்த கட்டுரையை பகிர்ந்து வருகின்றனர்.