வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜனவரி 2018 (15:52 IST)

விஜயேந்திரர் விவகாரத்தில் வைரமுத்து கருத்து இது தான்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்து சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செய்யாமல் மேடையில் அமர்ந்திருந்துவிட்டு தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜயேந்திரர் செய்தது தமிழுக்கும், தமிழன்னைக்கும் செய்த அவமரியாதை என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை ஆதீனம் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஞ்சி மடமும், விஜயேந்திரரும் தமிழை இந்த அளவுக்கு தான் மதிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய விவகாரத்தில் வைரமுத்துவுக்கு எதிராக பல இந்து அமைப்புகள் வெகுண்டெழுந்து கண்டனம் செலுத்தி போராட்டங்களை முன்னெடுத்தது.
 
ஆனால் தற்போது தமிழன்னையை அவமரியாதை செய்யும் விதமாக விஜயேந்திரர் நடந்துகொண்டது கண்டு அவர்கள் ஏன் பொங்கி எழவில்லை என கேள்வி எழுகிறது. வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள், ஏன் விஜயேந்திரர் தமிழன்னையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம் நடத்தவில்லை. வைரமுத்துவுக்கு ஒரு நியாயம், விஜயேந்திரருக்கு ஒரு நியாயமா? என பல கேள்விகள் எழுந்தன.
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ள கவிஞர் வைரமுத்து, தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை என கூறியுள்ளார்.