வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (08:36 IST)

இளைஞரணியில் சீனியர்களுக்கு ஓய்வு – உதயநிதியின் முதல் நடவடிக்கை !

உதயநிதி இளைஞரணிச் செயலாளர் பதவி ஏற்றதை அடுத்து முதல் நடவடிக்கையாக அந்த அணியில் உள்ள சீனியர்களை வேறு அணிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தற்போது முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது.இது குறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி செயல்படுவதாகவும், கட்சியின் அடிமட்டத்தில் இருந்து தொண்டு செய்து வந்தவர்களுக்கு எந்தவித பதவியும் கொடுக்காமல், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து உதயநிதிக்கு பதவி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த மூவ்களைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இளைஞரணி அலுவலகமான அன்பகம் சென்ற உதயநிதி அங்கு நிரவாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதை முடித்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விரைவில் இளைஞர்களை அதிகமாக சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதாகக் கூறினார்.

கடந்த ஜூலை 6 ஆம் தேதி முதல் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் சில அதிரடியான மாற்றங்களை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதில் 60 வயதுக்கு மேல் உள்ள சீனியர்கள் சிலர் தனக்குக் கீழ் வேலை செய்வதை உதயநிதி தர்மசங்கடமாக உணர்வதாகக் கூறப்படுகிறது. அப்படி வேலை செய்வது சீனியர்களுக்கும் நெருடலாக இருக்கும் என்பதால் அவர்களை வேறு அணிக்கு மாற்ற அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னோடு இணக்கமாக இருக்க தன் வயதையொத்த இளைஞர்களே வேண்டும் என உதயநிதி நினைப்பதால் இந்த அதிரடி மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆர்.டி.சேகர், அன்பில் மகேஷ், பைந்தமிழ் பாரி, ஜோயல், தாயகம் கவி போன்றோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.