1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (15:30 IST)

அணி மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரன் கூடாரம்

பதவி பறிப்பு, இரட்டை இலை விவகாரம் ஆகியவற்றால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணையும் முடிவிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.


 
துணை முதல்வர் ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்த போது, இவர் எப்படியும் எடப்பாடி அணியில் இணைய மாட்டார் எனக் கணக்குப் போட்ட தினகரன். எனவே, எடப்பாடி அணியில் இருந்து 18 எம்.எல்.ஏக்களை பிரித்து தனக்கென ஒரு அணியை உருவாக்கினார். எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அவர்களை ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வைத்தார்.  
 
ஆனால், அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. ஆளுநரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு பக்கம் ஓ.பி.எஸ்-ஸும் தர்ம யுத்தத்தை கேன்சல் செய்துவிட்டு எடப்பாடியுடன் இணைந்தார். இதனால், தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிபோனதுடன், 18 எம்.எல்.ஏக்களின் பதவியும் பறிக்கப்பட்டது. தற்போது, அது  தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. சபாநாயகரின் முடிவு சரிதான் என தீர்ப்பு வந்துவிட்டால் எதுவும் செய்ய முடியாது. முக்கியமாக, எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலையை மீண்டும் கொடுத்துவிட்டது தேர்தல் ஆணையம். 
 
இந்த விவகாரங்களால், அவரின் பின்னால் சென்ற 18 எம்.எல்.ஏக்களின் நிலை பரிதாபகரமாகியுள்ளது. அவர்களின் பதவியை தினகரன் மீட்டு கொடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில எம்.எல்.ஏக்களிடம் பேசிய டீல் படி பணம் முழுமையாக செட்டில் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.


 
இரட்டை இலையை பெற்று எடப்பாடி-ஓபிஎஸ் அணி தற்போது வலுவான அணியாக மாறியுள்ளது. இனிமேலும், தினகரனால் அதிமுக என்ற பெயரில் செயல்பட முடியாது. புதிதாக கட்சிதான் தொடங்க வேண்டும். அதில் சேர்ந்தால், கட்சி தாவல் தடை சட்டப்படி பதவி பறி போய்விடும். ஏற்கனவே, இழந்த பதவியை பெற எம்.எல்.ஏக்கள் போராடி வரும் நிலையில், இது நிரந்தர தடையை ஏற்படுத்திவிடும் என எம்.எல்.ஏக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
 
எனவே, இதை தவிர்க்க எடப்பாடி அணியோடு இணைவதே நல்லது என்ற முடிவிற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே, அவர்களை எடப்பாடி அணிக்கு இழுக்கும் முயற்சியும் ரகசியமாக நடைபெற்று வருவதால், எந்நேரமும் அவர்கள் அணி மாறுவார்கள் எனக் கூறப்படுகிறது.