வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (08:57 IST)

எம்.ஜி.ஆர். அன்று செய்ததை நான் இன்று செய்துள்ளேன் – டி.டி.வி. விளக்கம் !

பாராளுமன்றத் தேர்தலை அடுத்து நாடு முழுவதும் பரபரப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் அமமுக இணைப்புக் குறித்து டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

தமிழக்த்தில் மெகாக் கூட்டணியாக திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது. மேலும் இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் வலுவற்று இருக்கும் பாஜக வுக்கு அதிமுக வை விட்டால் கூட்டணிக்கு வேறு ஆள் கிடையாது. ஆனால் இப்போது இருக்கும் எடப்பாடித் தலைமையிலான அதிமுக வோடு மட்டும் கூட்டணி அமைத்தால் எந்த பலனும் இருக்காது என்பதை உணர்ந்துள்ள பாஜக அதிமுக வையும் தினகரனின் அமமுக வையும் இணைக்க அரும்பாடு பட்டு வருகிறது.

இது சம்மந்தமாக நேற்று புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதா கண்ட கனவுப் பலிக்கும். இதுதொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்” என்று கூறிப் புதிய சர்ச்சையைக் கிளப்பி சென்றார்.

ஆனால் அமமுக- அதிமுக இணைப்பை இருக் கட்சிகளின் தலைவர்களான எடப்பாடிப் பழனிச்சாமி, தினகரன் இருவருமே விரும்புவதாகத் தெரியவில்லை. ராம்தாஸ் அத்வாலேயின் கூட்டணி தொடர்பான நேற்றையப் பேச்சு குறித்து இன்று அமமுக துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று பதிலளித்துள்ளார். திருச்சியில் இன்று ஊடகங்களிடம் பேசிய அவர் ‘நான் எப்படி அதிமுகவில் சென்று சேர முடியும். எம்.ஜி,ஆர் எப்படி திமுக வைத் தீய சக்தி என்று கூறி அதில் இருந்து விலகி அதிமுகவை ஆரம்பித்தாரோ. அதுபோலவே இந்த துரோக சக்திகளை விட்டு நாங்கள் வெளியே வந்து அமமுக வை ஆரம்பித்துள்ளோம். அமமுகவில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்து உள்ளனர். அவர்களையெல்லாம் அதிமுகவில் மீண்டும் சேர சொல்ல முடியுமா?. நான் எம்.பியாக இருக்கும்போது ராம்தாஸ் அத்வாலேவும் எம்.பி.யாக இருந்தார். அந்த நட்பின் காரணமாக தன்னுடைய ஆசையைத் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அதிமுக வில் சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது.’ எனத் தெளிவாக விளக்கியுள்ளார்
இதனால் அதிமுக – அமமுக – பாஜக கூட்டணி குறித்து மீன்டும் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.