செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2018 (11:15 IST)

கமலை முந்திக் கொள்ள திட்டமிடும் தினகரன் - பின்னணி என்ன?

அரசியல் செயல்பாடுகளில் நடிகர் கமல்ஹாசனை முந்திக்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் கூட்டணி அணியை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி. தினகரன். ஆளுங்கட்சி மீதுள்ள அதிருப்தி தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போட்ட தினகரன், அதற்கேற்றார் போல் காய்களை நகர்த்தி வருகிறார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
.
இந்த நிலையில்தான் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதாக கூறி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். எடப்பாடி அரசு மீதுள்ள அதிருப்தி ஓட்டுகள் தனக்கு சாதகமாக அமையும் என கருதிய தினகரனுக்கு ரஜினி மற்றும் கமல்ஹாசனின் அரசியல் அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

 
குறிப்பாக கமல்ஹாசனை தனது முதல் எதிரியாக அவர் கருதுகிறார். காரணம், ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு பணப்பட்டு வாடா செய்தது என மோசமாக கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். மேலும், வருகிற பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் இருந்து அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும், தொடர்ந்து சில நாட்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
 
இதனால், மக்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு இமேஜ் கூடி விடக்கூடாது எனக் கருதும் தினகரன், வெகு விரைவில் அதாவது கமல்ஹாசனுக்கு முன்பே தனது சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்ட தினகரன் நேற்றே தனது சுற்றுப்பயணத்தை தஞ்சை மாவட்டத்தில் தொடங்கிவிட்டார். மேலும், இந்த சுற்றுப்பயணத்தில், எடப்பாடி அணிக்கு எதிராக, நாங்கள்தான் உண்மையான அதிமுக என்ற முழக்கத்தை முன்னெடுப்பதோடு, கமல்ஹாசனின் புகார்களுக்கு தகுந்த பதிலடியை அவர் மக்கள் முன்பு கொடுப்பார் என அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 
ரஜினி மற்றும் கமல்ஹாசனின் அரசியல் அறிவிப்புக்கு பின் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.