வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (18:20 IST)

சித்திக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா? - இரு அணிகளின் இணைவு பற்றி தினகரன் கிண்டல்

ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு அணிகளும் இணைவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தினகரன் கிண்டலான பதிலை அளித்துள்ளார்.


 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் விரைவில் ஒன்றிணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
 
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த தினகரனிடம் பாராமுகம் காட்டி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் இணையும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என இன்று செய்திகள் வெளியானது. இது தொடர்பா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
 
முக்கியமாக, சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இறங்கியுள்ளது. ஆட்சிக்கு எடப்பாடியும், கட்சிக்கு ஓ.பி.எஸ்-ஸும் தலைமையேற்கலாம். அதாவது, ஓ.பி.எஸ்-ஸிற்கு பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்படலாம். அதேபோல், ஓ.பி.எஸ் அணியில் உள்ள சிலருக்கு அமைச்சர் பதவிகளும் அளிக்கப்படலாம். அதிமுகவின் சட்ட விதிகளும் மாற்றியமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
 
இரு அணிகளும் இணைந்துவிட்டால் அதற்கு பின் தினகரனின் பலம் குறையும். மேலும், இவர்களுக்கு எதிராக அவரால் செயல்பட முடியாமல் போகும். எனவே, அவர் விதித்த கெடுவான ஆகஸ்டு 8ம் தேதிக்கு முன்பே இரு அணிகளும் இணைந்து விடும் எனக் கூறப்பட்டது.
 
இந்நிலையில், இரு அணிகளும் இணைவது பற்றி இன்று மாலை தினகரனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்  “ சித்திக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா என்பதை அப்போது பார்ப்போம்” என கிண்டலாக பதிலளித்தார்.
 
அதாவது, அவர்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என பொருள் படும்படி அவர் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.