வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (22:46 IST)

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மீண்டும் விடுமுறை

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.


 
 
கடந்த இரண்டு வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் இயல்பு நிலை திரும்பியதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சில தினங்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டன. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளில் வெள்ள நீர் முழுமையாக வடியாததால் சுமார் 50 பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது
 
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் வடதமிழகம் ஒட்டியுள்ள வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளதால், வங்கக்கடலில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக மீண்டும் கனமழைக்கு பெய்து வருகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பள்ளி-கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.