1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (15:33 IST)

தமிழகத்திற்கு கனமழை இல்லை - வானிலை மையம் அறிவிப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது.


 
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் ஓகி புயலால் கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அந்நிலையில், மேலும் ஒரு புயல் உருவாகும் எனவும், அதனால், தமிழகம் குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என செய்திகள் வெளியானது. இதனால், மக்கள் பீதிக்கு ஆளாகினர். ஆனால், அந்த புயல் வலுவடைந்து விட்டதால் அந்த புயலில் இருந்து தமிழகம்  தப்பித்தது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் “தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆனாலும், ஓகி புயல் மறைந்த பிறகுதான் இது புயலாக மாற வாய்ப்புள்ளது.
 
அதேபோல், அந்த புயலால் தமிழகத்திற்கு கனமழை இருக்காது. தமிழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்யும்” என அவர் தெரிவித்தார்.