1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (15:50 IST)

கேள்வி கேட்டு தலைவர டார்ச்சர் பண்ணாதீங்க: திருமுருகன் காந்தி நக்கல்

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தனக்கு தெரியாது என கூறிய ரஜினியை கடுமையாக விமர்சித்து பலர் பேசி வரும் நிலையில், திருமுருகன் காந்தியும் விமர்சித்துள்ளார்.
 
சமீபத்தில் ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளிவுபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார்.  
 
இதனை சமாளிக்க நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, செய்தியாளர் என்னிடம் ஒழுங்காக கேள்வியே கேட்கவில்லை. தெளிவாக கேள்வி கேட்டிருந்தால் நான் பதில் கூறியிருப்பேன் என பதிலளித்தார். 
 
இந்நிலையில் நாஞ்சில் சம்பத், இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், திருமுருகன் காந்தியும் இவர்களுடன் இணைந்துள்ளார். ரஜினியை விமர்சித்து அவர் கூறியது பின்வருமாறு, 
 
7 பேர் விடுதலை குறித்து ரஜினியிடம் கேட்டதே தவறு. அவரிடம் இதையெல்லாமா கேட்பது? 7 பேர் விடுதலை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட், காவிரி, தாமிரபரணி, முல்லைப்பெரியாறு என பல கேள்விகள் அவருடைய அவுட் ஆஃப் சிலபஸ் கேள்விகள். 
இதை எல்லாம் கேள்வியாக கேட்டால், அவர் எப்படி பதில் சொல்வார். இந்த விஷயத்தில் ஊடகங்களையும் பத்திரிகை நண்பர்களையும் நான் கண்டிக்கிறேன். ரஜினியை தொந்தரவு செய்யாதீர்கள். 
 
ரஜினி நல்ல நடிகர். இயக்குநர் சொல்வதை, இணை இயக்குநர்கள் சொல்லித்தருவதை, வசனகர்த்தா எழுதித்தரும் வசனங்களை பேசுவதை சிறப்பாக செய்யக்கூடிய ஒருவர். அவர் நம் பொழுதுபோக்கிற்கான நல்ல நடிகர். அவரிடம் போய் அரசியல் முக்கியத்துவம் கொடுத்து கேள்வியெல்லாம் கேட்டால் என்ன செய்வார்?
 
பாஜக மாதிரியான கட்சி, இந்த மாதிரியானவர்களை கொண்டுதான் தமிழகத்தை கையாள பார்க்கிறது. இனிமேலும் ரஜினியிடம் இந்த மாதிரி கேள்விகளெல்லாம் கேட்டு, அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என பேசியுள்ளார்.