1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (16:23 IST)

இந்தியத் தாக்குதல் குறித்து விமர்சனம் – திருமுருகன் காந்திக்கு கொலை மிரட்டல் !

இந்தியா பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது எனக் கூறியிருந்த திருமுருகன் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

இந்த அடுத்தடுத்தத் தாக்குதல் குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகின்றன. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இந்தியாவின் பதில் தாக்குதல் குறித்துப் பேசும் போது ‘பாகிஸ்தானின் தாக்குதலை அடுத்து இந்தியா பதில் தாக்குதல் தொடுத்ததைவிட உலக அரங்கில் பாகிஸ்தானின் அத்துமீறிய செயலைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். இதைப்பயன்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் மீது பொருளாதார தடையை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும்.அமெரிக்கா போன்ற நாடுகளே ஈரான்மீதும் மற்ற நாடுகள்மீதும் பொருளாதார தடைதான் கொண்டு வருகின்றது. அதுதான் நடைமுறை’ எனக் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சின் காணொலி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவரது இந்தப் பேச்சால் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசியில் அவருக்குக் கொலை மற்றும் மிரட்டும் மெசேஜ்கள் வருவதாகவும் அத்தகைய செயலில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திருமுருகன் காந்தி காவல்துறையில் இன்று புகார் அளித்துள்ளார்.