வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (14:29 IST)

ஜோக்கர் படத்தை புகழ்ந்து தள்ளிய திருமாவளவன்: கதை அன்புமணி ராமதாஸ் தொகுதியில் நடப்பதாலா?

ஜோக்கர் படத்தை புகழ்ந்து தள்ளிய திருமாவளவன்: கதை அன்புமணி ராமதாஸ் தொகுதியில் நடப்பதாலா?

கடந்த வாரம் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்ம் நல்ல கருத்தை தாங்கி நின்றாலும், திரை அரங்குகளில் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அப்படத்தை பார்த்தவிட்டு இயக்குனர் ராஜுமுருகனை பாராட்டி தள்ளியுள்ளார்.


 


ஜோக்கர் குறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது, ”ஜோக்கர் படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா? என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள். அதன் அடிப்படையில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராமப்புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள். பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார்.

மேலும், அரசாங்க செயல்பாடுகளால் விளைகிற ஊழல் போன்ற தீங்குகளை மிகத் துணிச்சலாக இதிலே பேசி இருக்கிறார் ராஜு முருகன். ஒரு ஜோக்கரின் மூலம் பல செய்திகளை இயக்குநர் கூறுகிறார். அவர் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறுவதும், அவர் இராணுவ ஆட்சியை இங்கே அமல்படுத்துவதாக அறிவித்து கொள்வதும் அதன் அடிப்படையில் அவர் செய்கிற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தில் தேவையாக உள்ளன.
தனி கட்சியாக ஒரு மாபெரும் அமைப்பாக இருந்து போராடாமல் உதிரியாக இருந்து ஓரிருவர் போராடுவதாக இந்த படம் விரிகிறது. ஆகவே தனி நபராக இருந்து எவ்வளவு பெரிய விஷயத்துக்காக போராடினாலும் அது நகைப்புக்குரியதாக பார்க்கப்படும் என்று இப்படம் சொல்லுகிறது. எனவே மக்கள் போர் குணத்தோடு இருந்தால் போதாது ஒரு அமைப்பை திரள வேண்டும், அமைப்பை திரண்டால் தான் சமூகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்வதற்கு, மாற்றங்களை கொண்டு வர முடியும் என்கிற வகையில் அவர் படத்தை முடிக்கிறார்.

ஆதலால் நாம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் அரசியல் சக்தியாக இருந்து போராட வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இயக்குநருக்கு மிகச்சிறந்த அரசியல் புரிதலும், தொலைநோக்கு பார்வையும், சமூக சிந்தனையும், மக்கள் நலனும் இருக்கிறது என்பதை இந்த படத்தின் ஊடாக அவர் பதிவுசெய்துள்ளார். இந்த இளம் இயக்குநர் இன்னும் பல மகத்தான சாதனைகளை படைக்க வேண்டும். இந்த படம் மிகப்பெரிய செய்திகளை பேசும் ஒரு படம், இந்த படம் ஒரு மௌன புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் சமூக தளத்தில் அரசியல் தளத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாழ்க இளம் இயக்குநர் ராஜு முருகன் மற்றும் அவரோடு கைகோர்த்து களமாடிய அனைத்து கலைஞர்களும்.” என்றார்.

ஜோக்கர் படத்தின் கதை அன்புமணி ராமதாஸ் தொகுதியான தர்மபுரியில் நடப்பதாலும், தர்மபுரியில் நடக்கும் அரசியலை கிண்டல் செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டதாலும் திருமாவளவன் ஜோக்கர் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.