1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 3 மே 2017 (11:47 IST)

பேஸ்புக் நட்பு மூலம் 13 வயது சிறுமியை சீரழித்த வாலிபர்....

திருப்பூரை சேர்ந்த சிறுமியை, பேஸ்புக் மூலம் அறிமுகமான வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தகவல்களை பறிமாறிக்கொள்ளவே உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளங்களை ஏராளமான வாலிபர்கள் தவறாகவே பயன்படுத்துகின்றனர். முதலில், பெண்களுடன் நல்லவர்கள் போல் நட்பாக பழகி, பின் அவர்களை தனது இச்சைக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் பல வாலிபர்கள் செயல்படுகின்றனர்.
 
திருப்பூரில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு, அதே ஊரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் சமீபத்தில் நட்பாகியுள்ளார்.  அந்த சிறுமிக்கு காதல் வலை வீசிய அந்த வாலிபர், அவரை கடந்த 19ம் தேதி, வீட்டை விட்டு வெளியே வா.. ஜாலியாக ஊர் சுற்றலாம் என அழைத்துள்ளார். அதன்படி அந்த சிறுமியும் வெளியே வர, அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். 
 
அந்த சிறுமி தனது கழுத்தில் அணிந்திருந்த நகையை விற்று இருவரும் செலவு செய்துள்ளனர். அதன் பின் புதுச்சேரி சென்று, பேருந்து நிலையம் அருகில் இருந்த ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு அந்த சிறுமியை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி மீண்டும் திருப்பூருக்கே சென்று விட்டார்.
 
மேலும், அந்த அறையில் தனியாக அழுது கொண்டிருந்த அந்த சிறுமியை, அந்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரனும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பி சென்ற அந்த சிறுமி, திருப்பூருக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவை பற்றி கூறியுள்ளார்.  இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அந்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.