வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (12:21 IST)

திமுக மேடைகளில் பேச குஷ்பு தயார்: பழைய பாசம் அப்படியே இருக்காம்!

ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, மீண்டும் திமுக மேடைகளில் பேச தனக்கு எந்த தயக்கமும் இல்லையென கூறியுள்ளார்.


 
 
திமுக-வின் மூலம் அரசியலில் நுழைந்து சினிமா, அரசியல் என பரபரப்பாக சுற்றி வந்தவர் குஷ்பு. திமுக தலைவர் கருணாநிதியை எந்த நேரமும் சந்திக்கும் பலம் பொருந்திய நபராக அந்த கட்சியில் இருந்து வந்தார். கட்சியில் அவருக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் கூடிவந்ததும், அக்கட்சியில் அவர் கொஞ்சம், கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார்.
 
இந்நிலையில் திமுக-வின் அடுத்த தலைவர் யார் என பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியினால், குஷ்பு மற்றும் அவரது வீடு மீது தக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து அரசியலில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த குஷ்பு, திடீரென காங்கிரஸ் கட்சியில் சோனியா, ராகுல் முன்னிலையில் சேர்ந்தார்.
 
கட்சியில் சேர்ந்ததும், தேசிய செய்தி தொடர்பாளர் என்ற மதிப்புமிக்க பொறுப்பு வழங்கப்பட்டு மீண்டும் அவர் அரசியலில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இருந்து வரும் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி அமைத்தால் திமுக மேடைகளில் பேச தனக்கு எந்த தயக்கமும் இல்லை என குஷ்பு கூறியுள்ளார்.
 
மேலும் திமுக தலைவர் கருணாநிதி மீதான மரியாதை சிறிதளவும் குறையாமல் வைத்திருப்பதாகவும், கட்சி அளவில் திமுக-வை விட்டு காங்கிரசில் சேர்ந்திருக்கிறேன். அதற்காக மரியாதை இல்லை என்பது இல்லை என்றார் குஷ்பு. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை, கட்சி மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என்றார்.