வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (10:03 IST)

நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - பழ.நெடுமாறன்

நியூட்ரினோ திட்டம் தேவையற்றது என்றும் இதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும்  தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். 
 
தமிழர் உரிமை மீட்புக்குழுவின் சார்பில் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது:–
 
கூடங்குளம் அணுமின்நிலையம் அமைக்க கேரளா மற்றும் ஆந்திரா அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தமிழகத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் அதிகப்படியான சதவீதத்தை இந்த 2 அரசுகளும் கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றது.
 
தேனி அருகே பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகின்றது. நடுநிலையான விஞ்ஞானிகளை கொண்டு திட்டத்தின் சாதகம், பாதகம் ஆகியவைகளை பொது மக்களுக்கு தெரிவித்து மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே திட்டம் தொடங்கப்படவேண்டும்.
 
இது எதுவுமே நடைபெறாமல் மத்திய அரசு திட்டத்தை தொடங்கியுள்ளது. இது தேவையற்ற திட்டம் ஆகும். இந்த திட்டதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீத்தேன், அணு உலை, நியூட்ரினோ ஆகிய திட்டங்களை உலக நாடுகள் மூடிக்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் தொடங்குவது ஏன் என புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.