வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (10:49 IST)

காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுதத கல்லூரி மாணவர் குத்திக் கொலை திருச்சியில் பயங்கரம்

காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவரை 4 பேர் கொண்ட கும்பல் குத்திக் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் இறுதியாண்டு படித்து வந்தார். 
 
தமிழ் வாணன், நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அருகருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்ததால் பொங்கல் அன்று மாலை அந்த மாணவியை, சென்னை -திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள மலைமாதா கோவிலுக்கு தமிழ்வாணன் அழைத்து சென்றுள்ளார்.
 
மாலை 6 மணி அளவில் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிய இருவரும் வழியில் குமூளூர் வனப்பகுதியின் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. தமிழ்வாணனின் இரு சக்கரவாகனம் சாலையோரம் தனியாக நிற்பதை பார்த்து, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்மநபர்கள், தமிழ்வாணனை அடித்து விரட்டி விட்டு, நர்சிங் மாணவியிடம் அத்துமீற முயன்றுள்ளனர். தமிழ்வாணன் அவர்களை எதிர்த்து போராடியுள்ளார். 
 
 அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகே கிடந்த மது பாட்டிலை உடைத்து தமிழ்வாணனை குத்தினர். இதில், கழுத்தில் குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தமிழ்வாணன் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
 
இதுகுறித்து அந்த பெண், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பின்னர், கொலை செய்யப்பட்ட தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.