வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (13:04 IST)

நான் ஒரு ‘புரோக்கரா?’: கொந்தளிக்கும் ரஜினி ஆதரவு தமிழருவி மணியன்!

நான் ஒரு ‘புரோக்கரா?’: கொந்தளிக்கும் ரஜினி ஆதரவு தமிழருவி மணியன்!

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி முடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.


 
 
தமிழகத்தை மாறி மாறி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இரண்டு திராவிட கட்சிகளையும் வங்க கடலில் கொண்டு தள்ளுவதற்காக ரஜினியை முதல்வராக்க தீவிரமாக செயல்பட்டு வரும் தமிழருவி மணியன் குறித்து சமூக வலைதளங்களில் பலவாறு விவாதிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் வெளியில் அவரைப்பற்றி எதிர்மறையாக பேசப்படுவது குறித்து பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று அவரிடம் பேட்டி கண்டது. அதில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி கூட்டணியை அமைத்து கொடுத்த தமிழருவி மணியன் ஒரு புரோக்கர் என்ற கடுமையான விமர்சனம் வந்தது.
 
மேலும் தற்போது தமிழருவி மணியன், ரஜினிகாந்திடம் பணம் பெற்றுக்கொண்டு மாநாடு நடத்தியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கூறுவது குறித்தும் தமிழருவி மணியனின் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த தமிழருவி மணியன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சித் தலைவர்களை சந்தித்து அவர்களை ஒரே கூட்டணியில் இணைத்ததற்காக திருமாவளவன் என்னைப் பார்த்து புரோக்கர் என்று சொன்னார். ஆனால் அவர் கமிஷன் வாங்கினார் என்ற அர்த்தத்தில் கூறவில்லை.
 
அதே நேரத்தில் நான் பார்த்த அந்த வேலையை கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திருமாவளவன் மக்கள் நலக்கூட்டணிக்காகச் செய்தார். அப்போது நான் திருமாவளவனை தரகர் என்று சொல்லவில்லை. யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற சமூக நலன் நோக்கத்தோடு செய்கிற ஒரு சீரிய முயற்சியை புரோக்கர் என்று சொல்வது சரியல்ல.
 
என்னைத் தரகன் என்று சொல்லக்கூடிய எந்த மனிதனும் என்னுடைய வாழக்கூடிய வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடத் தகுதி இல்லாதவர்கள். பணம் பெற்று தமிழருவி மணியன் காரியம் செய்கிறான் என்று எவராவது சொன்னால், அவர்களுக்கு நரகத்தின் வாசலில்தான் இடம் கிடைக்கும் என்றார்.