1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 13 ஏப்ரல் 2015 (13:22 IST)

10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஓடிப்போன டீச்சர்: கொல்லப்பட்டதாக வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி

தென்காசி பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவனும் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்த பெண்ணும் சில தினங்களுக்கு முன்னர் மாயமாகினர் அவர்களைத்தேடி தனிப்படை காவலர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் அந்த காதல் ஜோடி கொலை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப்பில் பரவிய தகலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் அவருக்கு வயது 15, அவர் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கடையநல்லூர் காவல்நிலையத்தில் அவரது தாய் மாரியம்மாள் புகார் செய்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவன் சிவசுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவசுப்பிரமணியன் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரை சங்கர சுப்பிரமணியன் தெருவைச் சேர்ந்த கேசரி மகள் கோதைலட்சுமி என்பவருடன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. கோதைலட்சுமிக்கு வயது 23. இது குறித்து கோதைலட்சுமியின் தந்தை செங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
 
கடந்த சில மாதங்களாக கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் நெருங்கி பழகியதாகவும். இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது என்றும் இதையறிந்த கோதைலட்சுமியின் பெற்றோர் அவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களைப் பிரித்துவிடுவார்கள் என்று எண்ணிய அவர்கள் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
 
இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் எங்கு சென்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே சிவசுப்பிரமணியன் வீட்டை விட்டு செல்லும் போது ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து சென்றார். இதனால் காவல்துறையினர் ஏ.டி.எம்.கார்டு நம்பரை வைத்து அதில் பணம் ஏதும் எடுக்கப்படுகிறதா? என்று கண்காணித்து வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று அந்த ஏ.டி.எம். கார்டில் இருந்து, கும்மிடிபூண்டியிலுள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மையத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் சிவசுப்பிரமணியனும், ஆசிரியை கோதைலட்சுமியும் சென்னை கும்மிடிபூண்டியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) அய்யப்பன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் ஆசிரியை மற்றும் அந்த மாணவனைத் தேடி சென்னைக்கு விரைந்தனர்.
 
இதற்கிடையே மாணவன், ஆசிரியை மாயமான சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. நேற்று அந்த மாணவனையும், ஆசிரியையும் வெட்டிக்கொலை செய்து விட்டதாக பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.