1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (15:20 IST)

தொடர்ந்து தவிர்க்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து – மோடியை விளாசிய ஸ்டாலின் !

பிரதமர் மோடிக் கலந்துகொள்ளும் விழாக்களில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசு சார்பில் நடக்கும் விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், விழா முடிந்தபின்னர் தேசியகீதமும் இசைக்கப்படுவது தமிழக அரசியல் மரபு. ஆனால் சமீபகாலமாக இந்த மரபு தமிழக அரசால் சரிவரக் கடைபிடிக்கப் படாமல் வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்காக தமிழகம் வந்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர். மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தோ அல்லது தேசிய கீதமோ இசைக்கப்படவில்லை. இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதுகுறித்து அப்போதைய தமிழ்நாடுக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதையடுத்து மீண்டும் நேற்று மோடித் திருப்பூருக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்தார். அதன் பின்னர் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்தோ அல்லது தேசிய கீதமோ இசைக்கப்படவில்லை. தொடர்ந்து மோடிக் கலந்து கொள்ளும் விழாக்களில் இது போல தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்யப்படுவதாக மோடி மீது புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து இன்று தனதுக் கட்சி சட்டமன்ற உறுப்பினரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘விழா மேடைகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்கும் மோடி, தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசுகின்றார். தமிழில் சகோதர, சகோதரிகளே என்று சொல்கிறார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி குறள் சொல்லுகிறார். மக்களை ஏமாற்றுகின்ற நிலையில் இன்றைக்கு பிரதமர் மோடி இருந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.