வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (12:48 IST)

சி.ஏ தேர்வில் தமிழக மாணவர் தேசிய அளவில் முதலிடம் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சமீபத்தில் நடந்து முடிந்த சி.ஏ. இறுதி தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவர்  தேசிய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கு திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
சிஏ இறுதி தேர்வில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரின் மகன் ஸ்ரீராம் அகில இந்திய அளவில் முதல் ரேங் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். முதல் ரேங் பெற்ற மாணவர் ஸ்ரீராமுக்கு மனமார்ந்த என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
 
மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் என் பாராட்டுகள். அகில இந்திய அளவில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்று சி. ஏ இறுதித் தேர்வில் வெற்றி பெறுவது மாநிலத்திற்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியாகவே கருதுகிறேன். கடந்த வருடம் இந்த தேர்வில் முதலிடம் பிடித்து தமிழக மாணவர் ஜான் பிரிட்டோ சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பல்வேறு தேர்வுகளிலும் அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் இப்படி அடுத்தடுத்து அரிய சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு பயிற்சி மையத்தை தமிழக அரசு சென்னை அண்ணா நகரில் வைத்திருப்பது போல், சிஏ படிப்பிற்கும் மாநில அரசு ஒரு புதிய பயிற்சி மையத்தை துவங்கி மாணவர்கள் சிஏ படிப்பில் மேலும் ஆர்வமாக சேருவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.