வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (15:46 IST)

ஜெயலலிதாவுடன் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரெனெ சந்தித்து பேசியுள்ளார்.


 

 
அரசியல் கூட்டணி என்று நீங்கள் யோசிக்க வேண்டாம்.. தமிழிசையின் மகன் டாக்டர் சுகநாதனுக்கு திருமணம் நடக்கவுள்ளது. அதற்கு அழைப்பு விடுவிக்கவே அவர் வந்தார். 
 
தமிழிசை, தனது மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழக அரசியலின் முக்கிய தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கும் ஏற்கனவே அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று காலை அவர், அவரது மகன் சுகநாதன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் தலைமை செயலகத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தனர். 
 
அதன்பின் தமிழிசை பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது “என் மகன் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக அவரை சந்தித்தேன். அவர் மிகுந்த அன்போடு அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். வருகிற 17ஆம் தேதி காலையில், சென்னை காமராஜர் அரங்கில் திருமணம் நடக்கவுள்ளது. மாலையில் வரவேற்பு என்று அவரிடம் கூறினோம்.
 
திருமணத்திற்கு கண்டிப்பாக வருகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை” என்று தமிழைசை கூறினார்.