வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:40 IST)

மீனவரை சுட்டது இலங்கை என்றில்லை..சீனாவாகவும் இருக்கலாம் - அதிர்ச்சி கிளப்பும் தமிழிசை

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவ இளைஞர் பிரிட்சோவின் மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  
 
இந்நிலையில் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, அவரின் உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிட்டு விட்டு பிரிட்சோவின் உடலை வாங்கிக் கொள்ளுமாறு ராமேஸ்வரம் கலெக்டர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று மீனவர்களிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதற்கு மீனவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். 
 
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வந்து, இது போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என உறுதியளிக்க வேண்டும். அப்போதுதான் பிரிட்சோவின் உடலை பெற்றுக்கொள்வோம். மேலும்,  எங்கள் மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரின் மீது அந்நாட்டு அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் இரவு பகலாக தொடரும் என ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா கூறியுள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன் “இந்த சம்பவம் நடைபெற்றவுடன் மத்திய அரசு, இலங்கையிலுள்ள இந்திய தூதரை அனுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.  ஆனால், தமிழக மீனவரை நாங்கள் சுடவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது. மீனவர்கள் சுடப்பட்ட இடத்தின் அருகில் சீனா நாட்டின் சார்பில் கட்டுமாணப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, தகுந்த விசாரணை நடத்தி உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்” என அவர் கூறினார்.