செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (15:00 IST)

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு இல்லை: தமிழிசை விளக்கம்!

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் போது ஆளுநர் பன்வாரிலால் தனியாக ஆய்வு நடத்தி வருவது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
 
டெல்லி, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இதுபோன்ற ஆய்வில் ஈடுபடுவதில்லை. ஆளுநர்களை வைத்து மாநில அரசை கட்டுப்படுத்த பாஜக முயல்கிறது என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
 
இருந்தாலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஆய்வை நிறுத்தாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று தஞ்சையில் அவர் ஆய்வில் ஈடுபட்டார். திமுகவினரும் தொடர்ந்து ஆளுநர் ஆய்வுக்கு கருப்புக்கொடி காட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் ஆளுநர் ஆய்வு நடக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு செய்யவில்லை, ஆய்வு நடைபெறுவதால் ஆளுநர் ஆட்சி நடக்கிறது என்று சொல்லக் கூடாது என்று விளக்கம் அளித்துள்ளார்.