வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:06 IST)

எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து - தமிழிசை விளக்கம்

பெண் பத்திரிக்கையாளர்களை பாஜக மிகவும் மதிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

 
பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது. 
 
அந்நிலையில், வேறொருவர் இட்ட பதிவை தனது முகநூல் பக்கத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தார். கனிமொழி எம்.பி.யும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து, எஸ்.வி.சேகர் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனாலும், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து எஸ்.வி.சேகருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “பெண் செய்தியாளர்களை பாஜக மிகவும் மதிக்கிறது. எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அவர்கள் பணிபுரிகிறார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்களை இழிவு படுத்தும் வகையில் சிலர் வெளியிட்ட கருத்துகளை நான் வன்மையாக கண்டித்து நீக்க சொன்னேன். அவர்களும் அதை நீக்கிவிட்டனர். அவர்கள் கூறியது பாஜகவின் கருத்து அல்ல என்பதை ஊடகங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் ” என அவர் கூறினார்.
 
எஸ்.வி.சேகரின் முகநூல் பக்கத்தில் அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.