வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2017 (15:01 IST)

’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி 26 முதல் அமெரிக்க குளிர்பானமான பெப்சி, கோகோ கோலா போன்றவற்றை விற்கமாட்டார்கள் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.


 

தமிழகமெங்கும் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வணிகர்களின் பங்களிப்பாக, தங்களின் ‘பெப்சி - கோகோ கோலா எதிர்ப்பு’ இருக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவரான த. வெள்ளையன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராடி வருகிறார்கள்; கடந்த ஒரு வார காலமாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு எங்கள் பங்காக அமெரிக்க குளிர்பான நிறுவன தயாரிப்பான பெப்சி, கோகோ கோலா மற்றும் அந்த நிறுவனங்களின் எல்லா வகையான குளிர்பானங்களையும் நாங்கள் விற்க மாட்டோம் என எங்களது அமைப்பைச் சேர்ந்த சுமார் 60 லட்சம் வணிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இதன் மூலம் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை; ஏனெனில் பெப்சி - கோக் குளிர்பானங்களை அந்த நிறுவனங்களிடம் வியாபாரிகள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; பதிலாக இந்திய குளிர்பானங்களை அதிக அளவில் அவர்கள் விற்பனை செய்வார்கள்.

பெப்சி, கோக் குளிர்பானங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என தில்லியில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நாராயணன் அறிவியல் பூர்வமாக சொன்ன போதும் அதை மத்திய - மாநில அரசாங்கங்கள் தடை விதிக்கவில்லை.

நடிகர் - நடிகைகள் குளிர்பான விளம்பரங்களில் நடித்தது போன்றவை குளிர்பான விற்பனையை அதிகரித்ததாகவும்; தற்போது மக்களுக்கு நாட்டுக் காளைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும், வெளிநாட்டு குளிர்பானங்களை நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.