வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (13:25 IST)

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தமிழக அரசின் ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை 20 சதவீதம் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.


 
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குவது தொழிலாளர்களின் உழைப்பே ஆகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். உற்பத்தியை பெருக்கி, அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்புபெரும் பங்கு வகிக்கிறது.  எனவேதான் தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு  பொதுத் துறைநிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21000 ரூபாய் என மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தஆண்டுகளில் 10,000 ரூபாய் என இருந்த தகுதி வரம்பை தளர்வு செய்து அனைத்து ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டதைப் போலவே தற்போது ரூ.21000 என்ற சம்பள உச்ச வரம்பை தளர்வு செய்து அனைத்து ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
 
போனஸ் கணக்கிட ஏற்கெனவே 3500 ரூபாய் என இருந்த மாதாந்திர சம்பள உச்ச வரம்பு திருத்திய போனஸ் சட்டம் 2015-ன் படி, 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 2015-16ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித்தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி:
 
1. இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு   ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
 
2. நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடுபோனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
 
3. தமிழ்நாடு மின்சாரவாரியம், அரசுப்போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
 
4. இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை மொத்தம் 20 விழுக்காடுவரையிலும் ஒதுக்கக்கூடிய உபரிதொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை வழங்கப்படும்.
 
5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
 
6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
 
7. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டகழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில்பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில்கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33 விழுக்காடுபோனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும். 
 
8. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடுபோனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
 
9. ஒதுக்கக்கூடிய உபரிதொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும்.  ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி‘மற்றும் ‘டி‘பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
 
10. இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
 
இதனால் போனஸ் பெறதகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 8400 ரூபாய்அதிகபட்சம் 16800 ரூபாய் பெறுவர்.தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு 476 கோடியே 71 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை ஏற்படும்.
 
என முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.